tamilnadu

img

காணாமல் போன விமானம்: விமானப்படை தேடுகிறது

கவுகாத்தி, ஜூன் 3-திங்கள் மதியம் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்துக்குப் புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானமொன்று திடீரென்று காணாமல் போனது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.அசாம் மாநிலம் ஜோர்காத் விமானப்படை தளத்தில் இருந்து, திங்கள் (ஜூன் 3) மதியம் 12.25 மணியளவில் ஆண்டனோவ் ஏஎன்32 என்ற விமானம் புறப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெசுகா எனும் ராணுவ முகாம் நோக்கிச் சென்ற இந்த விமானம், மதியம் 1 மணியளவில் தொடர்பிலிருந்து விலகிச் சென்றது. இதில் 8 ஊழியர்கள் உட்பட 13 பேர் பயணம் செய்தனர்.பொதுவாக, ஜோர்காத்தில் இருந்து மெசுகா செல்ல சுமார் 50 நிமிடங்கள் ஆகும். எனவே, விபத்து நடந்திருக்குமோ என்ற கோணத்தில் காணாமல்போன விமானத்தைத் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீசார் இந்ததேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.விமானம் காணாமல்போனது குறித்து இந்திய விமானப் படை துணை தளபதி ராகேஷ் சிங்குடன் பேசியதாகவும், காணாமல்போன விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள்நடைபெற்று வருவதாகவும், எல்லா பயணிகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லைப் பகுதிகளைப் பார்வையிடுவதற்கான அடிப்படையான தளமாக மெசுகா உள்ளது. மலைகள் மற்றும் காடுகள் அடர்ந்த இப்பகுதியில் மோசமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்துகுறைந்த தொலைவில் இருக்கும் மேகங்களுக்குள் விமானம் மாட்டியிருக்க வாய்ப்புண்டு எனவும், இப்பகுதியில் விமானத்தைச் செலுத்தும்போது எதற்கும் உத்தரவாதம் கிடையாது என்றும் முன்னாள் விமானப்படை அதிகாரி பிரஷாந்த் தீக்ஷித் கூறியுள்ளார்.ரஷ்ய நாட்டின் தயாரிப்பான ஏஎன்–32 ரக விமானங்கள், கடந்த40 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2016ஆம் ஆண்டு இந்த ரக விமானமொன்று சென்னையில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்குச் செல்லும்போது வங்கக்கடல் பகுதியில் மாயமானது. இப்போதுவரை அந்த விமானத்தில் இருந்த 29 பேரின் கதி என்னவானது என்று தெரியவில்லை.